Tuesday, March 10, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது
1922ம் ஆண்டு நவம்பர் 21  வெளிவந்த 3 வது இதழ் (மலர் 4 - இதழ் 9).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

இன்று 1922 - நவம்பர்  மாதத்தில் மூன்றாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழில்: 
வீரமாமுனி எழுதிய  ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் மரத்திடை தவழ்ந்த  கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (2 ஆவது பக்கம்)

தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையை எழுதுபவர் ஒரு கல்லூரி மாணவன் என்பதாகத் தெரிகிறது. 

இங்கிலாந்தின் தற்கால நிலை என்ற கட்டுரை உலக அரசியலை, இந்தியாவின் ஒத்துழையாமை இயக்கத்தை, இங்கிலாந்து  ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளுடன் கொண்ட உறவை, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் அதன் தாக்கத்தை இரு பத்திகளில் அலசுகிறது.


நாடார் கைத்தொழில் அபிவிருத்தி என்ற கட்டுரை இயந்திரமயமாக்கலால் கைத்தொழில்கள் நசித்துப் போனதுடன், கைத்தொழில் என்றாலே வியப்புடன் பார்க்கப்படும் நிலைமை ஒரு  நூறாண்டுக்கு  முன்னரே இந்தியாவில் ஏற்பட்டுவிட்டதைக் குறிப்பிடுகிறது. பத்துகஜம் நீளத்துணியும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் வகை நெய்யப்படும் சிறப்பு மிக்க "டாக்கா மஸ்லீன்" போன்றவற்றை உருவாக்கிய நெசவுத் தொழில்  புறக்கணிக்கப்பட்டு, ஒரு சிறு குண்டூசியும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும்  அளவிற்கு இங்கிலாந்து அரசு இந்திய பொருளாதார  நிலைமையில் மாற்றம் செய்துவிட்டது  சுட்டிக்காட்டப்படுகிறது. இயந்திரங்களால் குறைந்தவிலையில் பொருட்களை தயாரிக்கும் வண்ணம்நிலைமை மாறியதும்,   தொழிற்புரட்சியில் இந்தியா பின்தங்கியதும் இதற்குக் காரணமாகக் காட்டப் படுகிறது.  இலங்கையின் ராஜா தேவாரம் நாடார் என்ற பொறியியல் படித்தவருக்கு உதவி செய்து அவருடன் இணைந்து தொழிசாலைகள் அமைத்து, அதில் 90%  நாடார் குல மக்கள் பங்கு பெற்று தொழில் செய்து, அக்குல மாணவர்களை அயல்நாட்டிற்கு பொறியியல் கல்வி பயிலவும், இந்திய அரசு ஆட்சியின் ICS சிவில் பட்டங்கள் பெறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,   தென்னாட்டில் நாடார் முயற்சி வடநாட்டின் டாடா போல இருக்க வேண்டும்  என்ற திட்டங்கள் முன்வைக்கப் படுகிறது.  ராஜா தேவாரம் நாடாரின் தொழிற்திறமை பற்றிய தனிக்கட்டுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜாஜியின் தலைமையில் சென்னை சட்டசபை நடப்பதும், சென்னை சட்டசபைக்கு திருநெல்வேலிக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் லஞ்ச ஊழல் நடந்ததெனவும்,  டெல்லியில் பூகம்பம், கொழும்புவில் வெள்ளம், பஞ்சாபில் அகாலிகள் தாங்கள் நடத்திய மதப் போராட்டத்தில் வெற்றி, காங்கிரசில் உள்ள பிளவு நேர் செய்யப்பட்டது நாக்பூரில்  காங்கிரஸ் மாநாடு நடந்தது.  ஜான்சியில் கணவரின் மறைவுக்குப் பின்னர் உடன்கட்டை ஏறிய 19  வயது பெண் ...
அந்நாளில் சென்னை மாகாண மக்கட்தொகை விவரம்:
மொத்த மக்கதொகை     42,794,155
இந்துக்கள்                            37,942,191
இஸ்லாமியர்கள்              2,865,235
கிறிஸ்துவர்கள்                 1,390,672
போன்ற  தகவல்கள் இந்த இதழில்  கிடைக்கின்றன.


குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற பகுதிகள் வழக்கம் போல தொடர்கின்றன. இப்பத்திரிக்கையின் முக்கியப்பங்கான நாடார் மக்களை  ஒன்றுபடுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி அதற்குரிய செய்திகள், செயல் திட்டங்கள்   இடம் பெற்றுள்ளன. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்காக கட்டணம் கட்டுவதில் உதவி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன.
சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கனா விளம்பரங்களும் உண்டு.



நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி




வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்

No comments:

Post a Comment