Tuesday, June 7, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 8

_________________________________________________________

1. புலனாகா ஒளி
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? ஒளியலைகள் என்ற கட்டுரைகளைத்  தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும்  மற்றொரு இயற்பியல் கட்டுரை. இக்கட்டுரையில் கண்ணுக்குப் புலனாகாத ஒளி பற்றி விவரிக்கிறார்.  இன்று நாம் கூறும் 'அகச்சிவப்பு' மற்றும் 'புற ஊதாக் கதிர்களை' ஸ்ரீநிவாஸாச்சாரியார் 'செம்முன் அலைகள்' என்றும் 'ஊதாப் பின்னலைகள்' என்று குறிப்பிடுகிறார்.  அவற்றின் பண்புகளும் விளக்கப்பட்டுள்ளன. ஒளிக்கதிரின் மூன்று பண்புகளான 'ஒளிச் சிதறல்', 'ஒளி விலகல்', 'ஒளி பிரதிபலிப்பு'  ஆகியவற்றை முறையே, 'ஒருதுறைப்பாடு', 'நெறிவிலக்கம்', 'எதிர்மீட்சி' எனவும் குறிப்பிடுகிறார். குழியாடி, குவியாடி மற்றும் குழிவில்லை, குவிவில்லை ஆய்வகச் சோதனை முறைகளும் விளக்கப்பட்டுள்ளன]

2.கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்  (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை; தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறியான உள்ளுறை உவமங்கள் பொதிந்த கலித்தொகைப் பாடல்களின் இலக்கிய நயம் பாராட்டல் தொடர்கிறது]

3. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய நாடகம், தொடர்கிறது]

4. நினைவுகூர்தற்பொருட்டாய அறநிலை
அ. கைலாசம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'திக்கற்ற மாணவர்' இல்லத்திற்கு நன்கொடையளித்த த. பொ. கை. அழகர்சாமி பிள்ளை அவர்களின் குடும்பத்தினர் அமைத்துக் கொடுக்கும் அறக்கட்டளை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அவர்கள் வரைந்த அறக்கட்டளை விதிகள், அறக்கட்டளைக்கான சொத்து  விபரங்கள், நிர்வாக அமைப்பு, நிர்வாகக் குழுவினர்,  நிர்வாகக் குழுவினரைத் தேர்வு செய்யும் விதிகள் ஆகிய தகவல்கள்  கொண்ட ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.  அக்கால அறக்கட்டளைகள், அவை செயல்பட்ட  விதிமுறைகளுக்கு இதனை ஒரு எடுத்துக்காட்டாக் கொள்ளலாம்]

5.  உலகிற் சிறந்ததெது (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமி பிள்ளை
[உலகில் சிறந்தது சிவமே என்றக்  கருத்தினைத் தொடர்ந்து சிவபரம்பொருளின் பெருமைகளை உரைக்கிறது இக்கட்டுரை, இக்கட்டுரை தொடரும்]

6. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[1933 அக்டோபரில் சென்னைப் பல்கலைக்கக்ழகம் கூட்டிய பேரவைக் கூட்டத்திலும், டிசம்பரில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்திலும்  தாய்மொழி வளர்ச்சிக்காக மேற்கொண்ட முடிபுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில், திராவிட மொழிகளில் புதுக்கலைகளை நூலாக எழுதி  வெளியிடுவோரை ஊக்குவித்தல், வகுப்புகளில் தாய்மொழிக் கல்வியினை மேம்படுத்துதலுக்கான வழிகளை ஆராய என ஓர் ஆராய்ச்சிக் குழுவை நியமித்தல் ஆகிய முக்கியமான தீர்மானங்களும் அடங்கும்]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment