Monday, June 20, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 9

_________________________________________________________


1. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[இரண்டாம் அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதியில், தாட்டந்தங்களின் மாறுகோள், உடன் கருதல், இடமாற்றல், வெதிரேகித்தல், வெதிரேகித்திடமாற்றல், கவிழ்த்தல் ஆகிய கருத்தாக்கங்கள் விளக்கப்படுகின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

2. தம்பிரான்றோழர் தேவாரம்  (தொடர்ச்சி ...)
இ. மு. சுப்ரமணிய பிள்ளை
[தம்பிரான் தோழர் சுந்தரர் வழங்கிய  தேவாரப்  பாடல்கள் குறித்த இக்கட்டுரையில், நஞ்சு என்ற தலைப்பின் கீழ், மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு அமுதம் பெறும் பொருட்டு பாற்கடலைக் கடைந்தபொழுது, வாசுகி ஆலால நஞ்சினை உமிழ்ந்த கதைப்பகுதி இடம்பெறுகிறது.  சிவன் அந்த ஆலால நஞ்சினைக்  கொணர்ந்து தரும்படி சுந்தரருக்கு  கட்டளையிட, சிவனிடம் நஞ்சை சேர்ப்பித்தார்  சுந்தரர். இக்காரணத்தால் 'ஆலால சுந்தரர்' எனவும்  அழைக்கப்பட்டார். அந்த நஞ்சை உண்டு திருநீலகண்டன் ஆனார் சிவன். இந்த தொன்மக்கதையை சுந்தரர் தமது தேவாரப்பாடல்களில் குறிப்பிட்ட இடங்களை சுப்ரமணிய பிள்ளை  இக்கட்டுரையில் தொகுத்து வழங்குகிறார். இக்கட்டுரை  தொடர்கிறது]

3. இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கீதாஞ்சலியின் ஒரு செய்யுளைத் தழுவி எழுதிய பாடல்
செ. சின்னத்தம்பி
[தாகூரின் கீதாஞ்சலி கவிதை ஒன்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது]

4. ஆழ்வார் பாரதமும் பண்டைத்தமிழ் நூல்களும்
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தை பல்வேறு கோணங்களில் ஆராயும் ம. வி. இராகவன், இம்முறை பண்டைத்தமிழ் நூல்களுடன் ஒப்பிடுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை பிற்காலப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் எடுத்தாள்வதும்  வழக்கமே. அவ்வாறு, வில்லிபுத்தூரர் தாம் எழுதிய  பாரதத்தில் திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்ட பகுதிகளை சுட்டுகிறார் ம. வி. இராகவன். இக்கட்டுரை  தொடர்கிறது]

5. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[ தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது. நாடகத்தின் இப்பகுதியில், உறையூர் சிறையில்  இருந்து தப்பிய கரிகால் வளவனுக்கு முடிசூட்டப்படுகிறது]

7. வீரசோழிய உரையாசிரியர் காலம்
E. R. நரசிம்ம ஐயங்கார்
[வீரராசேந்திரன் என்ற வீரசோழன் (ஆட்சிக்காலம் கி.பி. 1062-1070)காலத்தவராகிய புத்தமித்திரனார் எழுதிய நூல் வீரசோழியம்.  வீரசோழியத்திற்குப் பெருந்தேவனார் உரை வழங்கினார்.  பெருந்தேவனார் காலம் பற்றி வழங்கும் பல  கருத்துக்கள் பிழையானவை  எனக் கருதி  மறு ஆய்வு செய்கிறார் நரசிம்ம ஐயங்கார். போற்றுவாரின்றி மறக்கப்பட்டு இருந்த வீரசோழியத்திற்கு உரை எழுதி கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பெருந்தேவனார். பெருந்தேவனார் உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்ட நூல்கள் யாவும் காலத்தால் பெருந்தேவனாருக்கும் முற்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற  அடிப்படையில், கண்டனலங்காரம், தண்டியலங்காரமும் அதன்  உரையும், வீரசோழியம் உரை ஆகியவை காலக்கோட்டில் முதல், இடை, கடை என வரிசைப்படுத்துகிறார் இக்கட்டுரை ஆசிரியர். கண்டனலங்காரம்  குறிப்பிடும் மன்னன் இரண்டாம் இராசராச சோழன்  (கிபி 1146-1163 ஆட்சிக்காலம்) என்பது இவரது முடிபு.  இக்கட்டுரை தொடர்கிறது]

8.  சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள;  மன்று, மாந்தர் ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது. இக்கட்டுரை தொடர்கிறது]

9. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[இந்திய மொழிகளைக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் நிலை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுடன்  ஒப்பிடப்பட்டு அவர்கள் சரிவர மதிக்கப்படுவதில்லை, சம அளவில் ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்று கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.  ஆசிரியப்பயிற்சிக்கான தக்க சான்றுகளும், பாடம் கற்பிக்கும் தகுதிக்கான பட்டங்களும் பெற்றிருந்தாலும் மொழியாசிரியர்கள், குறிப்பாகத் தமிழாசிரியர்கள் ஆங்கில ஆசிரியர்களுடன் ஒப்பிடப்படும்பொழுது மிகக்குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் ஊதியத்தை மேலும் குறைக்கும் முயற்சியையும் ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.  பல்கலைக்கழக அளவிலேயே மொழியாசிரியர்களுக்கு மதிப்பில்லாதபொழுது சட்டசபையிலும் அதே நிலை இருப்பதில் வியப்பில்லை. இது மொழி ஆசிரியர்களை இழிவுப் படுத்தும் நடவடிக்கை என  என்று வருத்தமும் கண்டனமும் பதிவு செய்யப் பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment