Thursday, June 30, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 7

_________________________________________________________


1. உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர் (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்ம அய்யங்கார்
[தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி விவாதத்தை ஒட்டி, நரசிம்ம அய்யங்கார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களின் சிறப்புக்கள் குறித்து விளக்குகிறார்.
இப்பகுதியில்; 'தொல்காப்பிய உரையாசிரியர்களில்' இருவர் 'பேராசிரியர்' எனக்குறிப்பிடப்பட்டனர் என்று கூறுகிறார். மேலும் உரையாசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்ட பிற புலவர்களின் தகவல்களின் அடிப்படையில் அவர்கள் வாழ்ந்த காலத்தை 11 - 14 நூற்றாண்டுவரை  காலக்கோட்டில்  (பக்கம் #250  இல்) வழங்குகிறார்  நரசிம்ம அய்யங்கார்]

2. அணி நலன்கள்
அ. சிதம்பரநாதஞ்  செட்டியார்
[பொன்னாலும் மணியாலும் ஆகிய அணிகள் சிறந்த அணிகள் அன்று;  பணிவுடைமை, இன்சொல்லுடைமை, கண்ணோட்டமுடைமை, நாணுடைமை, குணநலமுடைமை, நுண்மாணுழை புலமுடைமை ஆகியவையும், இவைபோன்ற மற்ற  பிற சிறந்த பண்புகளுமே அணிநலன் எனத்தக்கன என்பதையே வள்ளுவம் காட்டுகிறது என்கிறார் சிதம்பரநாதஞ்  செட்டியார்]

3. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  6  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. இயைபு நூல்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[பொருளின் அமைப்பு   என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்த   அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள், 'இயைபுநூல்' என்ற  தலைப்பில் தொடர்கிறார்.
1. பொருளின் மாற்றங்கள் - என்ற அத்தியாயத்தில், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் அவற்றின் பண்புகள், அவற்றின் நிலைமாற்றம்,  இயன்மாற்றம்,  மூலப்பொருட்கள், கூட்டுப் பொருள்கள்,  பொருட் பண்புகள் அவற்றை அறிய உதவும் ஆய்வகச் சோதனைகள் ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. கன்னட நாட்டு ஹோய்சள அரசர்களின் சிற்பச் சிறப்புகள்  - ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்
சி.கு. நாராயணசாமி முதலியார்
[கண்ணுக்கு விருந்தாகும் கவின்மிகு சிற்பங்கள் நிறைந்த, ஹோய்சள அரசர்கள் தோற்றுவித்த 'ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்' இருக்கும் இடம்,  திருப்பணி செய்த மன்னன், இறைவனின் பெயர், ஆலய அமைப்பு, கோவிலின் அளவு, மதில், சுவர் ஆகியவை தாங்கி நிற்கும் ஓவியங்கள், மண்டபத் தூண்கள் என விரிவாக விவரிக்கிறார் நாராயணசாமி முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள 'அம்பறாத்தூணி', அகராதியில் கொடுக்கப்படாத  'அம்புறாத்தூணி',  ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது.
சொற்களின் பொருள் விளக்கம் தரும் இக்கட்டுரை தொடர்கிறது]

7. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியாரின் அறிவாற்றலின்  காரணமாக  அமைச்சர் பதவி அவரைத் தேடி வருகிறது  என்பது குறிப்பிடப்படுகிறது]

8. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை
இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின்பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி நவிலல்.


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment