Saturday, July 2, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 9

_________________________________________________________

1. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார்  இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அவர் மனைவி உடன்கட்டை ஏற முயல, துறவி ஒருவரால் அம்முயற்சி  தடுக்கப்படுகிறது]

2. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  7  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. அஜந்தாவும் குடைவரைக் கோயில்களும் - மொழிபெயர்ப்பு (தொடர்ச்சி ...)
சி. கு. நாராயணசாமி முதலியார்
[அவுரங்கபாத் அருகிலுள்ள 'எல்லோரா'வில், 'இந்தியாத்திரிமலை' யின் சரிவில் கிழக்கு மேற்காக அமைந்த 29 குடைவரைக் கோயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எல்லோரா 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற இறைவழிபாட்டுத் தலமாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அஜந்தா குடைவரைகளில் அருமை, பெருமை, அழகு, சிறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது இக்கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதி; 29 குடைவரை கோவில்களையும் உருவாக்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் 4 காலத் தொகுதிகளில் வகைப்படுத்துகிறது.  கி.மு. 200 களில் துவங்கி கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் குகை அமைக்க உதவியவர்கள், குகையின் சிறப்பு, அவற்றில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்த விளக்கம் தரப்படுகிறது.  இதில் மூன்றாம் தொகுதி குகைகள் 2 ஆம் புலிகேசி காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜந்தா குகைகள் ஓவியத்திற்காகச் சிறப்பு பெற்றவை. அங்கு சுவர்களில் பூசிய சாந்துக்கலவை தயாரிக்கப்பட்ட முறை, நீண்டகாலம் நிலைத்திருக்கும் வண்ணங்கள் உருவாக்கப்பட்ட முறை, ஓவியங்கள் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட விதம், ஓவியங்களில் பிறநாட்டு ஓவியக்கலையின், குறிப்பாக காந்தாரக் கலையின்  தாக்கம், புத்தமதத்தின்  தொன்மக்கதைகள்  எவையெவை அந்த ஓவியங்களில் இடம்பெற்றன போன்ற செய்திகள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன]

4. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்   (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பைப் போற்றுகிறது  இக்கட்டுரை.  கலித்தொகையில் இடம் பெறும் உள்ளுறை உவமங்கள் மற்றும் மெய்ப்பாடுகள் குறித்து முன்னர் இலக்கிய நயம் பாராட்டப் பட்டது.
கட்டுரையின் இப்பகுதியில்; தொல்காப்பிய இலக்கணம் கருப்பொருளை சிறப்பிப்பதாகக் குறிக்கும் "இறைச்சிப் பொருள்" (கருப்பொருட்கு நேயம்) கலித்தொகை செய்யுட்களில் விரவியிருக்கும்  இடங்களை  நச்சினார்க்கினியர் விளக்கும் திறம் குறித்து ஆராய்கிறார் வரத நஞ்சைய பிள்ளை]

5.பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.  ஒவ்வொரு நூலாசிரியருக்கும் இவரைப் போல நூல் மதிப்புரை வழங்குபவர் ஒருவர் கிடைத்தால் அது ஒரு பெரும்பேறு என்று போற்றத்தக்க வகையில் அமைந்துள்ள இக்கட்டுரை ... தொடரும்]

6. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது. இப்பகுதியில், அண்டிரன் மீது கொங்கு மன்னர் போர் தொடுக்கத் திட்டமிடும் காட்சி இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

7. செய்திகள்
இதழாசிரியர்
[லூதர் பர்பேங்க்* (Luther Burbank)என்ற அமெரிக்க தோட்டக்கலை அறிஞரின் வாழ்க்கை வரலாற்றை  ஒரு நூலாகத் தமிழில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. அந்நூலுக்கு  மதிப்புரை  வழங்கப்பட்டுள்ளது.
மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கும், மருத்துவ சாலைக்கும்  நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது]

-------------------------------------------------------------------------------

லூதர் பர்பேங்க்* குறித்துத்  திரட்டப்பட்ட மேலதிகத் தகவல்:
லூதர் பர்பேங்க்  - https://en.wikipedia.org/wiki/Luther_Burbank
இவர் 'Autobiography of a Yogi' என்ற நூலை எழுதிய புகழ் பெற்ற பரமஹம்ச யோகானந்தரின் நண்பர். யோகி எழுதிய இந்த  நூல் லூதர் பர்பேங்கிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்நூலில்...
Chapter 38 – Luther Burbank, A Saint Amidst the Roses
https://en.wikisource.org/wiki/Autobiography_of_a_Yogi/Chapter_38

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment