Friday, August 5, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 4

_________________________________________________________

1. பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.  இக்கட்டுரை ... தொடரும்]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[5 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, சம்பா வித தாட்டாந்தம், சம்பாவித அந்நுவயங்கள்,  வியோக அந்நுவயங்கள், இருதலைப்பாடு,   போலி இருதலைப்பாடு, தொகுதிப்போலி,  பகுதிப்போலி, கிழமைப்போலி, ஒன்றினை ஒன்று பற்றுதல், மற்றொன்று மறுத்தல், கேள்விப்போலி,  காகதாலிய நியாயம்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. திருவாதவூரார் திருவாய்மொழி  (தொடர்ச்சி ...)
வி. குமாரசாமி ஐயர்
[அறம், பொருள், இன்பம், வீடு பேறு குறித்து தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் மூன்றும் மும்முதற் பொருளாகக் கருதுவது தமிழிலக்கிய மரபு.  இக்கருத்துக்கள் திருவாதவூரடிகள் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் நூல்களில் எங்ஙனம் கையாளப்படுகிறது என ஆராய்கிறார் குமாரசாமி ஐயர்.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. பெருங்காற்றும், மின்னலும், இடியும்
K. கோவிந்தன்
[மாணவர் யாத்த இந்த சிறு  அறிவியல் கட்டுரை, பெருங்காற்று, மின்னல், இடி  ஆகியவற்றின் தோற்றம், பண்பு ஆகியவற்றை விவரிக்கிறது]

5. ஏமநல்லூர் என்னும் வைப்புத் தலம்
வை. சுந்தரேச வாண்டையார்
[தேவாரத்தில் தமக்கென சிறப்பாக தனிப்பதிகம் பெற்ற சிவதலங்கள்  'பாடல் பெற்ற தலங்கள்' என்றும், பிற பதிகங்களின் பாடல்களில் பொதுவாக வைத்துப் பாடப்பெற்ற தலங்கள் 'வைப்புத் தலங்கள்' எனவும் அறியப்படும்.   காலப்போக்கில் பலவகைக் காரணங்களால் சில ஊர்கள் பெயர் மாற்றம் பெற்று, அவ்வூரின்  இருப்பிடம் அறிய முடியாமல் போனாலும், ஊர்க் கோவில்களில் இருக்கும் பழைய கல்வெட்டுகள் அவ்வூர் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது என்ற தகவலைத் தந்துதவும்.

திருநாவுக்கரசர் பாடல் ஒன்றில் 'ஏமநல்லூர்' என்ற தலம் வைக்கப்பட்டுள்ளது.  அது இக்காலத்தில் கும்பகோணத்தின் அருகில் உள்ள திருப்பனந்தாள் ஊருக்கு அண்மையில் உள்ள 'திரைலோக்கி'  என  அழைக்கப்படும்  ஊராகும் என்பதை, 'ஏமநல்லூராகிய திரைலோக்கி மகாதேவி சதுர்வேதிமங்கலம்' என்ற கல்வெட்டுக் குறிப்பொன்றால் அறிய முடிகிறது.  இது பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர்களில் ஒன்று  என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

6. பெண்ணின் பெருமை
R. மங்கையர்க்கரசி
[ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியான மங்கையர்க்கரசி தஞ்சை விநாயகர் தமிழ்க் கழகத்தின் ஆண்டுவிழாவில் 'பெண்ணின் பெருமை' குறித்து  நிகழ்த்திய சொற்பொழிவு கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் இடம்பெற்றுள்ளது. பெண்கல்வி பறித்து  பிறகு, பெண்கள் ஒடுக்கப்பட்ட பிறகு பாரதம் தனது  பெருமை குன்றியது எனக்குறிப்பிட்டு பெண்ணுரிமைக்கு குரல்  கொடுக்கிறார்]

7. செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்
T.V. சதாசிவப்பண்டாரத்தார்
[செருத்துணை நாயன்மார் பிறந்ததாகக் குறிக்கப்படும்  தஞ்சாவூர் சோழநாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சை மாநகர் அன்று.  அவர் பிறந்த ஊரான தஞ்சாவூர் என்பது,  இந்நாளின் தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் வட்டத்தில் அமைந்திருந்த, அந்நாளைய மருகல்நாட்டுத் தஞ்சாவூர் எனக் கல்வெட்டுத் தகவல் மூலம் காட்டுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். இது ஒரு தொடர் கட்டுரை]

8. ஒரு துயரம்
இதழாசிரியர்
திவான்பகதூர் சர். தி. நெ. சிவஞானம் பிள்ளை மறைந்தார்.

9. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment